Search This Blog

Friday, December 31, 2010

Cute Rhymes

புத்தாண்டின் பிறப்பு

                    தமிழ்ப் புத்தாண்டு போலவே ஆங்கிலப் புத்தாண்டுக்கும் ஆரம்பத்தில் குழப்பம் இருந்தது. சித்திரை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு, தை 1ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவதில் உள்ள குழப்பமான மனநிலை அன்றைய மேற்கத்தைய மக்களுக்கும் இருந்தது.

                    முட்டாள்கள் தினம் என்று நாம் ஏகபோகமாகக் கொண்டாடிவரும் ஏப்ரல் 1ஆம் தேதிதான் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் துவக்கம்.
                  
                    16ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை கொண்டாட்டமாக இருக்கும். இதில் எட்டாம் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி வருடப் பிறப்பாகக் கருதப்பட்டு, புத்தாண்டுக் கொண்டாடப்பட்டது. அதுவரை உலகின் நடைமுறையில் இருந்ததை ‘ஜூலியன் ஆண்டு’ என்கிறார்கள்.

                    அப்போது போப் ஆண்டவராக இருந்த கிரோகோரி ஏப்ரல் 1-யை மாற்றி ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவித்தார். அதுதான் அவரது பெயரையும் சேர்த்து அழைக்கப்படும் ‘கிரோகிரியன் காலண்டர்’ ஆனது.

                    அதுவரை ஏப்ரல் 1-யை புத்தாண்டாகக் கொண்டாடி வந்த மக்கள், ஜனவரி 1-யை புத்தாண்டாகக் கொண்டாட தடுமாறினர். நிறைய குழப்பங்கள் நேர்ந்தன. பல்வேறு தடுமாற்றங்களுக்குப் பின்னர். புத்தாண்டை ஒவ்வொரு நாடாக அங்கீகரித்தன.

                    ஸ்காட்லாந்து 1660-லும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் 1700-லும், இங்கிலாந்து 1752-லும், பிரான்ஸ் 1852-லும் ஜனவரி 1-யை புத்தாண்டு தினமாக அங்கீகரித்தன. ஆனால் மக்கள் லேசுபட்டவர்களா என்ன? அரசாங்கம் சொல்லியும் கேட்காமல், ஏப்ரல் 1-யையே புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். பார்த்தன அரசாங்கங்கள். மக்களை திசை திருப்ப (ஜனவரி 1 பக்கம்), ஏப்ரல் 1ஆம் தேதியை முட்டாள்கள் தினமாக அறிவித்தன எனக் கூறப்படுகிறது.

                    அதுமுதல் மக்கள் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாகவும், ஏப்ரல் 1ஆம் தேதியை முட்டாள்கள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர்.

                    இதுதாங்க புத்தாண்டு பிறந்த கதை. இது ஏதோ ஏப்ரல் 1ஆம் தேதி அன்று வரவேண்டிய செய்தி என்று நினைத்து விடாதீர்கள்.

குறை ஒன்றும் இல்லை கண்ணா!!!!!!!!!

மார்கழி 16- பொருள்+பாடல்

பாவயர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க வேண்டுதல்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பனே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்.


விளக்கம்:
சென்ற பாடல் வரை, தூங்கிக்கொண்டிருந்த கோபியரையெழுப்பிய பாடல்களைக் கண்டோம். இப்பாடலில் பாவையர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க சொல்லுகின்றனர்.


"அனைவருக்கும் தலைவனான ஸ்ரீ நந்தகோபனுடைய கோயிலைக்காப்பானே! கொடிகளுடன் விளங்கும் தோரண வாயிலைக் காப்பானே! தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு! ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு நேற்றே, அனைவரையும் மயக்கும் நீல மணிபோன்ற நிறத்தையுடைய கண்ணபிரான், பறையை (மத்தளம்) தருகிறேனென்று வாக்களித்துள்ளான். எனவே, அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்ப, திருப்பள்ளியெழுச்சி பாடுவதற்கு தூய்மையுடன் வந்துள்ளோம். எனவே மறுக்காமல், வாசல் படியோடு சேர்ந்துள்ள கதவைத் திறந்து எங்களை உள்ளேவிடு!"

Thursday, December 30, 2010

மார்கழி 15 - பாடல்+பொருள்


எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோரெம்பாவாய்.

விளக்கம்: 
குறிப்பு: சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம்.

[எழுப்புபவர்] "இளங்கிளி போன்ற சொற்களையுடையவளே! இன்னமும் உறங்குகின்றாயோ?"

[எழுந்திருப்பவர்] "என் தோழிகளே! 'சில்' என்று மிக்க கூச்சலிட்டு என்னை எழுப்பாதீர்கள்". புறப்பட்டு வருகின்றேன்"

[எழுப்புபவர்] "பேச்சு வன்மையுள்ள உன் உறுதிமொழியையும் உன் பேச்சு திறனையும் நாங்கள் நன்கு அறிவோமே"

[எழுந்திருப்பவர்] "நீங்கள்தான் பேச்சுத்திறமையுடையவர்கள். அல்லது, நீங்கள் கூறும்படி நானே வல்லவளாக இருக்கட்டும்"

[எழுப்புபவர்] "சீக்கிரம் எழுந்துவந்து எங்களுடன் கலந்து கொள். வேறு எதை நினைத்து, இன்னும் எழுந்திராமல் இருக்கிறாய்?"

[எழுந்திருப்பவர்] "எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா?"

[எழுப்புபவர்] "எல்லாரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிக்கொள். குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் என்னும் பகைவர்களின் க்ர்வத்தை அழித்து, நம் அனைவரையும் மாயையில் வீழ்த்துபவனின் புகழைப் பாட காலம் தாமதியாது விரைவில் எழுந்துவா."

மார்கழி 14 - பாடல்+பொருள்


எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது தூங்குதல் முறையோ?

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.


விளக்கம்:
"உங்கள் வீட்டு புழக்கடைத் தோட்டத்து தடாகத்துள் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து, கருநெய்தல் மலர்கள் பூத்துக் குவிந்துள்ளன. காவியுடை தரித்த வெண் பற்களையுடைய தவசிகள், தங்கள் திருக்கோயில்களைத் திறக்க செல்லுகின்றனர். பெண்ணே! நீ எங்களை முன்னரே எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாமலிருந்தும் செய்யவில்லையே என்ற நாணம் துளியும் இல்லாதவளே! பேச்சு மட்டும் இனிமையாகப் பேசுபவளே! சங்கு, சக்கரம் தரித்து, விசாலமான திருக்கைகளையுடையவனும் தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையுடையவனுமான கண்ணபிரானின் பெருமைகளைப்பாட எழுந்திருப்பாயாக!"

Tuesday, December 28, 2010

மார்கழி 13 - பாடல்+விளக்கம்


படுத்துறங்குவதை விட்டு எழுந்து வா!

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுழங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"பறவை உருக்கொண்டு வந்த பகாசுரனின் வாயைப்பிளந்து கொன்ற கண்ணன் மற்றும், இராவணனுடைய பத்துத்தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த ராமனுடைய கீர்த்திகளையும் பாடி, ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நூற்க குறித்த இடத்தில் வந்து சேர்ந்துவிட்டனர். (சுக்கிரன்) வெள்ளிக்கிரகம் உச்சிக்கு வந்து, வியாழன் (பிரஹஸ்பதி) மறைந்துவிட்டது. மேலும் காலைப்பறவைகள் ஒலித்துப் பறந்து செல்லும் சப்தம் உனக்கு காதில் கேட்கவில்லையா? சிவந்த தாமரைப் போன்ற கண்களையுடையவளே! இந்நன்னாளில் தூங்குவதுபோல கண்களை மூடிக்கொண்டு பாவனை செய்வதை விட்டுவிட்டு, எங்களுடன் குளிர்ந்த நீரில் அமிழ்ந்து முழுகாமல், படுக்கையில் உறங்குகிறாயே பாவைப்பெண்ணே! எழுந்து வா."

மார்கழி 12 - பாடல்+விளக்கம்

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலை கேட்டும் உறங்குவதேன்?

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்து கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

விளக்கம்:
                                "இளங்கன்றுகளுடைய எருமைகள், பால் கறப்பார் இல்லாமையால், தன் முலைக்காம்புகள் கடுத்து, தன் கன்றுகளை நினைத்து, முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து, அதனால் வீடு முழுவதும் ஈரமாகி, சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் இல்லத்து தலைவனின் தங்கையே! சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால் சினம் கொண்டு, இலங்கை வேந்தன் ராவணனைக் கொன்ற மனத்திற்கினிய ராமனின் திருப்புகழை, பனித்துளிகள் எங்கள் தலையில் விழ உன் மாளிகையின் வாசத்தூணைப்பற்றிக்கொண்டு, நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ எழுந்த பாடில்லையே! ஊரில் இருப்போர் அனைவரும் எழுந்துவிட்டபின்னரும் நீ எழவில்லையே! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருளென்ன?"


Sunday, December 26, 2010

திருவிளையாடல்-(Video)

மார்கழி 11 பாடல் + விளக்கம்

அசையாமல் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?

கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்து
 செற்றார்திறல் அழியச்சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோரெம்பாவாய்.


விளக்கம்: 
                     "கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும், பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புறிபவர்களும் ஆன குற்றமற்ற இடையர் குலத்தில் பிறந்த கொடி போன்ற அழகிய வடிவையுடயவளே! பாம்பைப் போன்ற மெல்லிடை உடையவளும், மயில் போன்ற சாயலையும் உடையவளே! மேகம் போன்ற வண்ணக்கண்ணனின் புகழை பாடிக்கொண்டு ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்துவந்து, உன் வீட்டின் முன்னர் வந்து குழுமியிருந்தும், செல்வ சீமாட்டி நீ, சிறிதும் அசையாமலும் பேசாமலும் உறங்குவதன் பொருள் என்ன?"

மார்கழி- 10௦ பாடல் + விளக்கம்

பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
 மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் ப்ண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்!

விளக்கம்:
"நோன்பு நோற்றுச் சுவர்க்கம் அடைய விரும்பிய பெண்ணே! வாசல் கதவைத்திறக்காவிட்டாலும் ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த முடியை உடையவனும், அனைத்து உயிர்களை காப்பவனும், நம்மால் வணங்கப்பட்டு நமக்கு வேண்டிய பலன்களைத் தரும் தர்ம பரிபாலகனுமான நாராயணனால் ராமவதாரத்தில் வதம் செய்யப்பட்ட கும்பகர்ணன், தனக்கே உடமையாகிய பெருந்தூக்கத்தை உன்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டானோ? மிகுந்த சோம்பலும் உறக்கமும் உடையவளே! எங்களுக்கு அணி போன்றவளே! தூக்கம் தெளிந்து, கதவைத் திறப்பாயாக!"

Friday, December 24, 2010

மார்கழி - 9 பாடல்+விளக்கம்

மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப்பாடுவோம்!

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!


விளக்கம்:

"மாசற்ற வைரங்கள் பொறுத்தப்பட்ட மாளிகையில் நான்கு புறமும் தீபங்கள் எரிய, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் துயிலுரும் மாமன் மகளே! மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமிமாரே! துயிலுரும் உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களோ? தங்கள் மகள் ஊமையோ அல்லது செவிடோ? சோம்பிப் பெருந்தூக்கம் உடையவளோ? அல்லது, எழுந்திராதபடி காவலில் வைக்கப்படுள்ளாளோ? ஏதேனும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்புவதற்கு 'வியக்கத்தக்க விசேஷ குணங்களை உடையவனே, வைகுண்டத்தில் வாழ்பவனே, மஹாலக்ஷ்மியின் நாயகனே' என எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை சொல்வோம்."

Thursday, December 23, 2010

மார்கழி- 8 பாடல் + விளக்கம்

கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி:


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
 மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!


விளக்கம்:


              "பெருமகிழ்ச்சியுடன் விளங்கும் பெண்ணே! கீழ்த்திசையில் வானம் வெளுத்துள்ளது. எருமைகள் பனி படர்ந்த புல்வேலிகளில் மேய்வதைப்பார்! பாவை நோன்புக்கு கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் அழைத்துச்செல்ல உன் வாசலில் வந்து நின்றோம். இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்னும் அரக்கனின் வாயைப்பிளந்தவனும், கம்சனால் ஏவப்பட்ட (சாணூரன், முஷ்டிகன் என்னும்) மல்லர்களை மாளச்செய்தவனும், தேவாதி தேவர்களுக்கெனல்லாம் தலைவனான கண்ணனின் மகிமையைப்பாடி, அவனை நாம் வணங்கினால், நம் குறைகளை மன்னித்து, அருள் புரிவான். எனவே எழுந்திராய்!"

Tuesday, December 21, 2010

கலைஞரின் குறளோவியம்

        ஒருநாள் மாலைப்பொழுது! ஏரிக்கரை ஓரமாக வள்ளுவர் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனை. சற்று நிற்பார். மீண்டும் நடப்பார். அவரைக் கடந்து இருவர் ஏதோ வாயாடிக்கொண்டு போயினர்.
        "யாரப்பா இந்த ஆள்? எப்போது பார்த்தாலும் ஏரிக்கரை, குளக்கரை, மலைப்பாறை என்று அலைந்து கொண்டேயிருக்கிறான்; வானைப் பார்க்கிறான்; பூமியைப் பார்க்கிறான்; நெற்றியைச் சுருக்குகிறான், யார் இது?
        இப்படி ஒருவன் கேட்க, மற்றொருவன் ஏளனமாக விளக்கமளித்தான், “வள்ளுவனாம்! அதிலும் சாதாரண வள்ளுவன் இல்லையாம்! திருவள்ளுவனாம்! சிந்திக்கிறானாம், அறநூல் எழுதுகிறானாம் கிறுக்கன்! எத்தனையோ பித்தர்களில் இவனும் ஒரு பித்தன்”.

மார்கழி--7 பாடல் + விளக்கம்

பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும், தயிற்கடையும் ஓசையும், நாங்கள் பாடுபவதும் கேட்டும் இன்னும் படுத்துரங்கலாகுமோ?

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.

விளக்கம்:


"கீசு கீசு என்று, ஆனைச்சாத்தன் பறவைகள் எழுப்பும் பேரொலி உனக்கு கேட்கவில்லையா, பேதைப்பெண்ணே! வாசனை வீசும் கூந்தலையுடைய இடைச்சிமார்கள், தங்கள் தாலிகள் தள தள என்று ஒலிக்க, மத்தினால் கைகளை மாற்றி மாற்றி தயிர் கடையும் சப்தத்தை கேட்டிலையோ? நம் பெண்கள் கூட்டத்துக்கு தலைமையானவளே! நாராயணனின் திரு அவதாரமான (கேசவன் என்னும்) கண்ணன் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாகுமோ? முகத்தில் பிரகாசம் ஜொலிக்கும் பெண்ணே! எழுந்து கதவைத்திற!

Monday, December 20, 2010

மார்கழி-6 பாடல் + விளக்கம்


பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்

விளக்கம்:

"உறங்கும் பெண்ணே! பறவைக் கூட்டங்கள் எழுப்பும் சப்தத்தை கேட்டாயோ? கருடனை வாஹனமாகக்கொண்ட விஷ்ணுவின் ஆலயத்தில் திருப்பள்ளியெழுச்சிக்கு அனைவரையும் அழைக்கும் சங்கின் பெரிய சப்தத்தை நீ கேட்கவில்லையோ? இளம் பெண்ணே! எழுந்திருப்பாயாக. பூதனா என்னும் அரக்கி, தாய் உருவம் கொண்டு, தனது முலைகளில் நஞ்சு தடவிக்கொண்டு, கண்ணனுக்குப் பால் ஊட்டுகையில், அதை அறிந்த கண்ணன், பாலையும் அவள் அளித்த விஷத்தையும் உண்டு, அந்த அரக்கியின் உயிரையும் குடித்தான். பின்னர், வஞ்சனையுடன் வண்டி உருவில் வந்து கண்ணன் மேல் சாய்ந்து கொல்ல முயன்ற சகடாகரன் என்னும் அரக்கனை, தன் சிறு கால்களால் உதைத்து, அவ்வண்டியைக்கவிழ்த்து, அவ்வசுரனைக்கொன்றவனும், திருப்பாற்கடலில் பாம்பின் மீது சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவை முனிவர்களும் யோகிகளும் தங்கள் உள்ளத்தில் அவனை நினைத்துக்கொண்டு, 'ஹரி, ஹரி' என்று எழுப்பும் பேரொலி, எங்கள் உள்ளத்தில் புகுந்து, குளிர்ந்துள்ளது. அதனைக்கேட்க, நீயும் எழுந்திராய்!

Sunday, December 19, 2010

மனித நேயம்


"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார். அவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்தியவர். அதுபோல் திருவள்ளுவர்

"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு"


என்று அன்புணர்வின் உன்னதத்தை சித்தரிக்கிறார்.

உயிரோடு கூடிய உடம்பு அன்பு வழியில் இயங்குவதாகும். அவ்வன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பானது எலும்பைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பாகும்.

மேலும், கனியன் பூங்குன்றனார்

"யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகளாவிய அறைக்கூவலை விடுக்கிறார்."

மதங்கள் அனைத்தும் அன்பையே முதன்மைப் படுத்தி போதிக்கின்றன. அன்பே கடவுள் என்கின்றன. ஆனால் மனிதன் நாகரிகம் வளர வளர புற உலக வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னை மறந்தான். பொருளாதார போராட்டத்தில் மனித நேயம் பறந்து போயிற்று.

எதிலும் ஒரு எதிர்பார்ப்பு கொண்டு வாழ்கிறான். இதனால் பரிசுத்தமான அன்பைக் கூட பாசாங்கு போலவே நினைக்கத் தோன்றுகிறது.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள் வாழ்ந்த நம் தேசத்தின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது.

மார்கழி-5 பாடல் + விளக்கம்

கண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும்

மாயனை மன்னுவட மதுரை மைந்தனை
தூயப் பெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்.

விளக்கம்:

             "மாயனும் தெய்வத்தன்மை பொருந்திய வட மதுரையில் உதித்தவனும், சுத்தமான நீர் நிரம்பிய யமுனைக்கரையில் விளங்குபவனும், ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய விளக்கு போன்றவனும், தேவகியை பெருமைப்படுத்தியும், யசோதைக்கு சிறு மணிக்கயிற்றால் கட்டுண்ட வயிற்றைக் காட்டி சந்தோஷப்படுத்தியவனுமான கண்ணனை, உள்ளும் புறமும் பரிசுத்தமாய் வந்து, வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து, உடலால் வணங்கி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், முற்பிறவிப்பாவங்களும், அறியாமல் வருகின்ற பாவங்களும், நெருப்பில் விழுந்த பஞ்சு போல் அழிந்து போகும். எனவே, அவன் திருநாமங்களை சதா ஓதிக்கொண்டிருத்தல் வேண்டும்."

Saturday, December 18, 2010

மார்கழி - 4பொருள்+பாடல்

மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்

 ஆழிமழைக்கண்ணா! ஒன்றும் நீ கைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கருத்து
பாழியந்தோளுடை பத்பநாபன் கையில்
ஆழிபோல்மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கமுழைத்த சரமழைபோல்
வாழஉலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்


விளக்கம்:
"மழை பொழிவதற்கு காரணக்கடவுளான கண்ணா! உன் மழையாகிய குடையில் சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாதே! கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, கம்பீர முழக்கமிட்டு, ஆகாயம் முழுதும் பரவி, திருமாலின் கருமேனி போன்று நிறம்பெற்று, மூங்கில் போன்ற அழகிய தோள்களையும், திருமாலின் வலக்கரத்தில் ஏந்திக்கொண்டுள்ள சுரதர்சன சக்கரம் போல் பிரகாச ஒளி வீசிக்கொண்டு, அவனது இடக்கரத்தில் ஏந்திக்கொண்டுள்ள சங்கின் சப்தம் போல் இடி இடித்து முழங்கி, அப்பரமன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லால் எய்தப்பட்ட அம்பு மழைபோல், உலகமக்கள் வாழும்படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும், சரமாரியாக மழை பொழிய வேண்டுகிறோம்."

 
 

Friday, December 17, 2010

மார்கழி- 3 பொருள்+விளக்கம்


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி


நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


 

ஆசிரியர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?.?.?.?.




  • ஆசிரியர் என்பவர் வேராக இருந்து, மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய் இருக்க வேண்டும்.
  • அறிவை உருவாக்குதல், ஊட்டுதல், அன்பை விதைத்தல், புதுப்பிப்பவர்களாக இருக்க வேண்டும்.
  • பாதை போட்டுக் கொண்டே பயணம் செய்ய வேண்டும், பயணம் செய்து கொண்டே பாதை போட வேண்டும்.
  • 'வெற்றி என்பது பெற்றுக் கொள்ள, தோல்வி என்பது கற்றுக் கொள்ள' என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
  • ஆசிரியர்களுக்கு நம்பிக்கை என்பது தேவை. நமக்கு மீறிய சக்திதான் நம் அறிவை தீர்மானிக்கும். தீர்மானிக்கும் இடத்தில் தான் நாம் உதவி செய்ய முயல வேண்டும்.
  • மாணவர்களின் படைக்கும் திறன் சிந்திக்கும் ஆற்றலை முதல் வேலையாக எடுத்து செயல்பட வேண்டும்.

Thursday, December 16, 2010

மார்கழி-2 பாடல்+பொருள்


நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்:



பாடல்:

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரரெம்பாவாய்!

Wednesday, December 15, 2010

மார்கழி1- பாடல்+பொருள்



மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை




                  மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், 'மார்கழி நோன்பு'. ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) 'திருப்பாவை' யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை' யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை. திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழிமாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.

   

    ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்திருந்த பெரியாழ்வார் வீட்டு துளசி மாடத்தில் கண்டெடுக்கப்பெற்று, அவரால் வளர்க்கப்பட்டவர் ஸ்ரீ ஆண்டாள். பெரியாழ்வார் கண்ணபிரானை பெருந்தெய்வமாக கருதி, அவர்மீது பல பாடல்களைப்பாடியுள்ளார். அவைகளை தினமும் கேட்டு வளர்ந்த ஆண்டாள், தானும் கிருஷ்ண பக்தியில் அளவிலா ஈடுபட்டு, கண்ணனிடம் தெய்வீக காதலும் கொண்டு, அவரை மணக்கவும் ஆசைப்பட்டாள். தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்றாள். அப்பொழுது அவர் பாடிய முப்பது பாடல்களை 'திருப்பாவை' என்றும், தான் கண்ணனை மணப்பதாக கனவு கண்டு பாடிய 143 பாடல்களை 'நாச்சியார் திருமொழி' என்றும் கூறுவர். பின்னர் ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதனையே சென்றடைந்து, அவருடன் இரண்டறக்கலந்தார்.


  



இனி திருப்பாவை பாசுரங்களையும், அவற்றின் பொருளையும் இனி வரும் நாட்களில் பார்ப்போம்.

Tuesday, December 14, 2010

...கற்றலில் மறதி...


மறதி

         நாம் கற்றுக்கொண்டதை அல்லது பெற்ற அனுபவத்தை தேவைப்படும் போது மீண்டும் நினைவு கூற இயலவில்லையென்றால் அதனை மறதி அல்லது மறத்தல் என்று கூறுவர்.


 
மறத்தலின் காரணிகள்

    மறத்தல் என்பது இரு காரணிகளைக்(factors) கொண்டது. அவை,

  1. நாம் கற்கும்போது கற்ற பொருள் நம் மனதில் எவ்விதம் பதிந்துள்ளது.
  2. கற்றனவற்றை அழிக்கக்கூடிய காரணிகளின் வலிமை எத்தகையது என்பதைப் பொறுத்தது.

Sunday, December 12, 2010

மனித உரிமைகள்.........

விளக்கம்:
                    மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.
                    சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். 
                    மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். 
                    ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது "எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 
                    1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
                    மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. 
                    மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.

வரலாறு
        மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.
        1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்". பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன.

வீரபாண்டிய கட்ட பொம்மன்

அபர்ணா (எ) தங்க செல்வி

Wednesday, December 8, 2010

பாஞ்சாலி சபதம்-2

மன்னன் திருதராட்டிரனின் அழைப்பை, விதுரன் வந்து சொல்ல, அதன்படி இந்திரப் பிரஸ்தத்திலிருந்து புறப்பட்ட பாண்டவர்கள் அத்தினாபுரம் வந்தடைந்தனர். இவர்கள் வரும் செய்தியறிந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். அந்த நகரத்தின் சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள் எந்த திசை நோக்கினாலும் மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது. இவ்வளவு மக்கட்கூட்டமும் இதுநாள் வரை எங்கே இருந்தது என்று வியக்கும் வண்ணம் எள் விழவும் இடமின்றி நிரம்பியிருந்தனர்.

வேத விற்பன்னர்கள் வேதகோஷம் இசைத்தனர்; மன்னர்கள் தங்கள் தோள்தட்டி ஆர்ப்பரித்தனர்; யானைகளும், தேர்களும், குதிரைகளும் வீதிகள் தோறும் ஓசை எழுப்பிச் சென்றன. மங்கலம் பாடுவோர் இசைக்கும் ஒலியும், ஆடற்பெண்கள் நாட்டிய நிகழ்ச்சிகளும், கோடி வகை வாத்தியங்களின் இன்னிசை முழக்கங்களும் அந்த நகர் முழுதும் நிறைந்திருந்தன.

யுதிஷ்டிரன் முதலாய பாண்டவர்கள் ஓர் தேரில் ஏறி அம்மாண் நகர் வீதிகளில் வந்தபோது, பெண்கள் பொன் விளக்கேந்தி வர, பார்ப்பனர் பூர்ணகும்பங்கள் வழங்க, மக்கள் மலர் மழை பெய்திட, காற்றில் தோரணங்கள் ஆடிட அந்த நகரத்தின் எழில் கூடி விளங்கியது. இப்படி ஊர்வலமாக வந்த பாண்டவர் மன்னவன் அரண்மனை வந்தடைந்தனர். அரசவையிலிருந்த மன்னன் திருதராட்டிரனை வணங்கி ஆசி பெற்ற பின், பீஷ்ம பிதாமகரின் காலடிகளை வணங்கி, கிருபாச்சாரியார், துரோணர், அவரது புதல்வன் அசுவத்தாமன் மற்றுமுள்ள பெரியோர்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துப் பெற்றனர். பிரிந்திருந்தவர் கூடி அவரவர் குசலம் விசாரித்த பின் அந்தி வேளை வந்தது, சந்தி ஜபம் செய்ய அனைவரும் தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர்.

பாஞ்சாலி சபதம்-1

இந்த பாரத புண்ணிய பூமியில் இராமாயணமும், மகாபாரதமும் காலங்காலமாக மக்கள் போற்றிப் புகழ்ந்து, கற்று வரும் அறநூலாகும். இவ்வரலாற்றினை பல காலங்களிலும் பல்வேறு புலவர்களும் பாடிவைத்திருந்தாலும், அவை அத்தனையும் தமிழ் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கம்பனின் 'இராம காதையும்', வில்லிபுத்தூராரின் 'வில்லி பாரதமும்' தமிழ் மக்களுக்குப் புதியதல்ல. வியாச பாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ள இந்த 'பாஞ்சாலி சபதம்' பற்றி மகாகவி கூறும்போது, "இந்நூல் வியாச பாரதத்தைப் பெரும்பாலும் தழுவி வரையப்பட்டது என்றாலும் பல அற்புத மாற்றங்களையும் இதில் காணலாம்" என்கிறார். மகாகவியின் கூற்றுப்படியே, இதில் எளிய நடை, எளிய பதங்கள், இனிய சந்தங்கள் அடங்கியவையாகக் காணப்படுகிறது. சொல்வழக்கு எளிமையென்றாலும் கூட, அதில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் கனமானவை.

மகாகவி இயற்றியுள்ள "பாஞ்சாலி சபதத்தை" இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, முதல் பிரிவினை கவிதை வடிவிலிருந்து உரைநடையாக இந்த பாடத்தில் கொடுத்திருக்கிறோம். இதன் இரண்டாவது பகுதி 'சூதாட்டச் சருக்க'மாக அடுத்த பாடத்தில் வெளிவரும். புதிதாகப் படிப்பவர்க்கு எளிதில் விளங்க வேண்டுமென்பதற்காகப் 'பாஞ்சாலி சபதம்' உரைநடை வடிவில் கொடுக்கப்படுகிறது. எனினும் பாடத்தைப் படிக்கும்போது கவிதைப் பகுதியையும் உடன் வைத்துக் கொண்டு படித்தால் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை கவிதை, உரைநடை இரண்டையும் படித்தபின் மகாகவியின் எழுத்துக்களைத் தொடர்ந்து கவிதை வடிவிலேயே படியுங்கள். புதிய எண்ணங்கள், சிந்தனைகள் ஒவ்வொரு முறையும் தோன்றக்கூடும். இனி படியுங்கள், இப்பாடத்தின் இறுதியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கான விடைகளை விரைவில் எழுதி அனுப்புங்கள்.

இக்காப்பியத்தின் தொடக்கத்தில் மகாகவி பிரம்மத்தை வணங்கித் தொடங்குகிறார்.

பாஞ்சாலி சபதம்

   

1. பிரம துதி

நொண்டிச் சிந்து

ஓமெனப் பெரியோர் கள்-என்றும்
    ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
    தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்
    தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்
    நாமமும் உருவும் அற்றே-மனம்
    நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
    ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்
    அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்;     1

பழமொழி

பழமொழி என்றால் பழமையான மொழி, பழம் போல் இனிக்கும் பொன்மொழி என்று கொள்ளலாம். தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளை உலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் விதத்தில் உதிர்த்த வாய் மொழிகள் பிறருக்கு வழிகாட்டியாக விளங்கியதால் அவை பழமொழி, பொன்மொழி என்று அம்மொழிகளின் பொருளை உணர்ந்து அவற்றின் யதார்த்ததை அனுபவித்தவர் கூறினர்.

பழமொழிப் பட்டியல்
(1) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
(2) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
(3) ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
(4) வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
(5) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
(6) அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்
(7) அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(8) அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்

Sunday, December 5, 2010

வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்


         தமிழின் 18 மெய்யெழுத்துக்களை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். மெய்யெழுத்துகள் 18இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.



         தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் தோன்றும். இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ, வாக்கியத்திலோ, பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இரா. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும்.

          பொருளடக்கம்

              1 வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்

                 a)அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்

                 b) எ என்னும் வினா எழுத்தின் பின்

                 c) அந்த, இந்த, எந்த என்னும் அண்மை சேய்மைச் சுட்டு மற்றும் வினாச் சுட்டுகளின் பின்

                 d) அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்

                 e)அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின்

              2 வல்லெழுத்து மிகா இடங்கள்

                 a) அது, இது, எது என்னும் சொற்களின் பின்

                 b) ஏது, யாது என்னும் சொற்களின் பின்

                 c) அவை, எவை, இவை, யாவை

                 d) அத்தனை, எத்தனை, இத்தனை

                 e) அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு

                 f) அன்று, என்று, இன்று


பாரதியார் ஆத்திச்சூடி

காப்பு - பரம்பொருள் வாழ்த்து
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்தல் ஒழி
12. ஔடதம் குறை
13. கற்றது ஒழுகு

Saturday, December 4, 2010

சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு


முன்னுரை :

**சுற்றுச்சூழலைக் காத்திடுவோம்!
**சுகமாய் வாழ வழிவகுப்போம்!
**வெற்று வார்த்தை இதுவல்ல,
**விளையும் நன்மையோ பலப் பல! - பி.வி.கிரி.
   இன்றைய சூழ்நிலையில் எல்லோர் இதயத்திலும் இருக்க வேண்டிய கருத்து இதுவேயாகும்.
   சுற்றுசூழல் சுற்றுப்புறத்தை சூழவுள்ள இயற்கை சூழலைக் சிறப்பாக குறிக்கின்றது. சுற்றுசூழல் என்ற சொல்லை சமூக பொருளாதார சூழல் என்ற சொற் பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் சூழல் என்ற சொல் இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை சூழ்மை என்றும் குறிப்பிடலாம்

சுற்றுச்சூழல் :

         நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்றப் பொருள்களின் தொகுப்பே சுற்றுச்சூழலாகும். பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த நன்மைகளையும் தீமைகளையும் ஆராய்ந்து பார்த்தால் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே விஞ்சி நிற்கின்றன.


சைவமும் வைணவமும்!



       இந்துமத அடிப்படை உண்மைகளும் கொள்கைகளும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே இங்கிருந்த மக்களிடையே தோன்றி வளர்ந்தது. சிந்து சமவெளி நாகரீகம் ஆங்கிலேயர்கள் கண்டுபிடிக்கும் முன்னர், ஆரியர்களின் சமஸ்கிருத வேதங்களும் கடவுள் களுந்தான் இந்தியாவின் தொன்மை வாய்ந்தவை என கற்பிக்கப்பட்டு வந்தன. ஆங்கில அறிஞர் சர் ஜான் மார்ஷல் முயற்சியால் சிந்து சம வெளி நாகரீகம் அகழ்வாராய்ச்சி செய்யப்பட் டது. சிந்து சமவெளி மக்கள் திராவிடர்கள் என்றும், இவர்களது மொழி பழந்தமிழ் எனவும் உறுதிப்படுத்தப்பட்டன. ஹரப்பா, மொகஞ்ச தாரோவில் தோண்டி எடுக்கப்பட்ட புதைப் பொருட்களின் ஆராய்ச்சியில் 5000 ஆண்டு களுக்கு முன்னரே சிவ வழிபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிவன் யோக வடிவில் (பசுபதி எனவும் அழைக்கப்படும்) அமர்ந்துள் ளார். அவரைச் சுற்றியும் பசுக்கள் மற்றும் விலங்குகள் சுற்றி நிற்பது போன்ற முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் சிவன் வழிபாடு வரலாற்றுக்கு முற்பட்டதென்பது தெளிவாகத் தெரிகிறது.

சைவ சமயம்


         சைவ சமயம், சிவன் அல்லது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை. இம்மதத்தினை இன்று 2200 இலட்சம் மக்கள் பின்பற்றுகின்றனர்.

         பொருளடக்கம்

           1 சைவ சமயத்தின் தோற்றம்

           2 சைவத்தின் மூன்று பிரிவுகள்
           3 சைவ வழிபாட்டின் பண்புகள்

                                
 

வைணவம்


          இந்து சமயத்தில் மும்மூர்த்திகளாகக் கருதப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரில் விஷ்ணுவை முழு முதற் கடவுளாகக் கருதும் சமயம் வைணவம் அல்லது வைஷ்ணவம் என்று அழைக்கப்படும். விஷ்ணு உலகில் பத்து அவதாரங்களாக அவதரித்தார் என்பது வைணவ நம்பிக்கை. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும். பன்னிரு ஆழ்வார்கள் வைணவ சமயம் பற்றித் தமிழிற் பாடியுள்ளனர்.

பொருளடக்கம்
1 வைணவ தத்துவம்
2 ஸ்ரீ
3 வைணவத்தில் மோட்சம்
4 வைணவத்தில் கடவுள்
5 வைணவ ஆச்சாரியர்கள்
6 வடகலையும் தென்கலையும்



Translate